சுகிர்தா ஜோசப் பிரேம்நாத் எழுதிய (Holiness to the Lord) என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.
பதிப்பாசிரியர்: எஸ்தர் பியூலா ரத்தினம்
"பரிசுத்தம்" என்ற வார்த்தை நம்மில் பலருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக, "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வாசகம் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து வருகிறது. தேவன் மோசே மூலமாக ஆசரிப்புக் கூடாரத்தில் (ஆலயம்) ஆராதனை செய்வதற்கான வழிமுறைகளைக் கொடுத்தபோது இதைக் குறிப்பிடுகிறார். ஆராதனையில் மகா பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது பிரதான ஆசாரியர் எப்படி உடை அணிய வேண்டும் என்பதற்கு அவர் குறிப்பிட்ட வழிமுறைகளைத் தருகிறார். ஆசாரிய உடையில் ஒரு பகுதி தலைப்பாகை ஆகும். யாத்திராகமம் புத்தகத்தில் வேதம் இவ்வாறு கூறுகிறது:"நீ பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைச் செய்து, அதிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று முத்திரைவெட்டாக வெட்டி, அது தலைப்பாகையின்மேல் இருக்கும்படி ஒரு இளநீல நூலினால் அதைக் கட்டக்கடவாய்; அது தலைப்பாகையின் முன்புறத்தில் இருக்கவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் பாவ நிவிர்த்திக்காக பரிசுத்தம் பண்ணுகிற சகல பொருட்களையும் கொண்டு வரும் பொழுது பாவத்தைத் தீர்க்கும்படிக்கு, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் அங்கிகரிக்கப்படும்படிக்கு, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்." யாத்திராகமம் 28:36-38
பிரதான ஆசாரியராகிய ஆரோனும், அவருக்குப் பின்வரும் தலைமுறை ஆசாரியர்களும் கர்த்தருடைய சமூகத்தில் பணிவிடை செய்ய நுழையும்போதெல்லாம் இந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும். தலைப்பாகையில் உள்ள அந்தப் பொற்பட்டம், பிரதான ஆசாரியர் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமானவர் என்றும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராகப் பிரிக்கப்பட்டவர் என்றும் நினைவூட்டுவதற்காக இருந்தது.சகரியா புத்தகத்தில், சாத்தான் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் மேல் குற்றம் சுமத்துகிறான், ஆனால் கர்த்தர் யோசுவாவைப் பாதுகாக்கிறார். யோசுவாவின் அழுக்கான ஆடைகள் நீக்கப்பட்டு, சுத்தமான ஆடைகள் மாற்றப்படுகிறது.தலைப்பாகையும் அவன் தலைமேல் வைக்கப்படுகின்றது. இது ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யும் ஆசாரியரின் ஆடையாகக் கருதப்படுகிறது. பிறகு கர்த்தர் "கிளை" (The Branch) என்பதைக் குறித்துப் பேசுகிறார் - இதன் மூலம் பரிசுத்தம் என்பது இயேசு சிலுவையில் செய்யப்போகும் காரியத்தோடு நேரடியாக இணைக்கப்படுகிறது. இயேசு இல்லையென்றால் யோசுவா பரிசுத்தமாக இருக்க முடியாது! (சகரியா அதிகாரம் 3 வாசிக்கவும்).இயேசுவே மகா பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்பதை வேதாகமம் பல இடங்களில் காட்டுகிறது. இதன் மூலம் ஆலயங்களில் ஆசாரியர்களின் முறைமை முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால், இயேசு சிலுவையில் மரித்தபோது, மகா பரிசுத்த இடத்தை மறைத்துக் கொண்டிருந்த திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. நமக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இனி ஒரு ஆசாரியரோ அல்லது சடங்குகளோ தேவையில்லை. இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் இதை நிறைவேற்றி முடித்தார். வேதாகமம் இத்துடன் நின்றுவிடாமல் ஒரு படி மேலே சென்று, இயேசுவின் மரணத்தின் மூலம் நாம் கிருபையைப் பெற்றவுடன் நாமும் அந்த ஆசாரியத்துவத்தின் ஒரு பகுதியாக மாறுகிறோம் என்று கூறுகிறது. பேதுரு சபைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்:"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." 1 பேதுரு 2:9
இயேசு சிலுவையில் செய்த காரியத்தினால், நீங்கள் பழைய காலத்து பிரதான ஆசாரியர்களுக்குச் சமமான நிலையிலும், கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்திலும் அவருடன் நிற்கிறீர்கள். உங்களுக்காக ஜெபிக்கவோ அல்லது பாவநிவிர்த்தி செய்யவோ இனி ஒரு ஆசாரியர் தேவையில்லை. நீங்கள் இயேசுவோடு உடன் சுதந்தரவாளிகளாக தைரியமாக கிருபாசனத்தை அணுகி, "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்று நிற்க முடியும்.

இப்போது இந்த ஓவியத்தைப் பற்றி - இந்த ஓவியத்தின் மையப்புள்ளி ஆசாரியரின் தலைப்பாகை. அந்தத் தலைப்பாகை உங்களுடையது. இயேசுவின் சிலுவை மரணத்தினால் தேவன் எப்படி யோசுவாவையும் ஆரோனையும் பரிசுத்தமாகக் கண்டாரோ, அப்படியே உங்களையும் பரிசுத்தமாகக் காண்கிறார். தலைப்பாகையின் கீழ் உள்ள நீல நிறத் துணி, நீங்கள் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தபோது உங்கள் அழுக்கான ஆடைக்கு மாற்றாகக் கொடுக்கப்பட்ட ஆசாரிய ஆடையைக் குறிக்கிறது. பின்னணியில் கிழிந்திருக்கும் திரைச்சீலை - இயேசு சிலுவையில் முடித்த காரியம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைக்கிறது என்பதைக் குறிக்கிறது. அபிஷேகத் தைல ஜாடி, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும் ராஜரீக ஆசாரியக் கூட்டமாகவும் இந்த உலகிற்காக வேண்டுதல் செய்ய உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அபிஷேகத்தைக் குறிக்கிறது. என் ஓவியங்களில் நீங்கள் இறகைக் கண்டால், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறிக்கும்.இந்த ஓவியம் உங்களைப் பற்றியது, உங்கள் ஆசாரியத்துவம் மற்றும் உங்கள் பரிசுத்தத்தைப் பற்றியது. தேவன் உங்களைக் "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்று காண்கிறார். நீங்கள் உங்களை அப்படிப் பார்க்கிறீர்களா? உங்கள் ஆசாரியத்துவத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா அல்லது தேவனுடைய ராஜ்யத்தில் உங்கள் அடையாளத்தை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா?
"கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? இயேசுவின் சிலுவை மரணம் நம்மை ராஜரீக ஆசாரியர்களாக மாற்றியுள்ளது என்பதே உண்மையான அர்த்தமாகும்.




